யாழ் குடாநாட்டில் மழைநீரை சேமித்து நன்னீர் வளத்தைப் பாதுகாப்போம்

யாழ் குடாநாட்டின் நன்னீர் வளம் உவர் நீராக மாறும் அபாயத்தில் இருந்து எமது பிரதேசத்தையும்,  எமது வளத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு பொதுமகனதும் கடமையாகும். ஒவ்வொரு வருடமும் யாழ் குடாநாட்டிற்கு 1240 mcm- 1300mcm (மில்லியன் கன மீற்றர்) மழை வீழ்ச்சியை இயற்கை எமக்குத் தருகின்றது. அதில் 150mcm  விவசாய பயன்பாட்டிற்கும் 20mcm குடிநீர் உட்பட வீட்டுப் பாவனைக்கும் செலவிடப்படுகின்றது. ஏனைய நீரில் நிலத்திற்கு கீழ் உறிஞ்சப்படுகின்றது போக மிகுதி பெரும்பாலான நீர் கடலில் கலந்து விரயமாகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. கடலில் விரமாகும் நீரை இயன்றளவு எமது வீட்டுச் சுற்றாடலில் , வயல்களில் குளங்களில்,  மழை நீர் சேகரிக்கும் தொட்டிகளில் சேமிக்க வேண்டும் . இதன் மூலம் நிலத்தடியில் மழைநீர் ஊறிச் சென்று உவர் நீர்ப் படலம் மேல் எழா வண்ணம் நன்னீர் வளத்தைப் பாதுகாக்க முடியும்.

நாம் அளவுக்கதிகமான நன்னீரை விரயமாக்குகின்றோம். நன்னீரின் ஒவ்வொரு துளியும் எமக்கு முக்கியமானது. எனவே நாம் அதைப் பாதுகாக்க வேண்டும்.

குடாநாட்டில் தீவுப்பகுதி உட்பட பல பிரதேசங்களில் உள்ள கடல் நீர் தடுப்பணைகள் சரியான முறையில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். இதை நீர்ப்பாசன திணைக்களமும் , அரசாங்கமும் கவனமெடுத்து விரைவாக செயற்படுத்த வேண்டும். இதன் மூலம் மழை நீர் கடலுக்கு வழிந்தோடுவதைத் தடுப்பதுடன் கடல்நீர் உட்புகாமலும் தடுக்க முடியும். குடாநாட்டு நன்னீர் வளத்தைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட மறைந்த பொறியியலாளர் ஆறுமுகம் அவர்களால் வடிவமைக்கபட்ட தொண்டைமானாறு நன்னீர் ஏரித்திட்டம் (ஆறுமுகம் திட்டம்),  வழுக்கையாறுத் திட்டம் , உப்பாற்றுத் திட்டம், வடமராட்சி நன்னீர் ஏரித்திட்டம்  போன்ற நன்னீர் சேமிப்புத் திட்டங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கி விரைவாக அமுல் நடாத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் , அரச உயர் அதிகாரிகளும் , அரசும் உடனடியாக இவ் விடயத்தில் கவனமெடுத்து செயற்படுத்த வேண்டும். அத்துடன் ஒவ்வொரு உள்ளுராட்சி சபைகளும் தங்கள் எல்லைக்குட்பட்ட பொதுக்குளங்களை, கோயில் குளங்களை , வயல் நிலங்களை புனரமைத்து முடிந்தளவு மழைநீரை சேமிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

குளங்கள் , ஏரிகளில் சேமிக்கப்படும் மழை நீர் ஆவியாவதைத் தடுப்பதற்கு தாமரை , அல்லி  போன்ற தாவரங்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் நீர் ஆவியாவதைத் தடுக்கலாம். பொதுமக்கள் முடிந்தளவு தண்ணீரை விரயமாக்காது பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நன்னீரை சேமிக்க முடியும். தோட்டங்களுக்கு நீர்ப்பாய்ச்சும் போதும் காலையில் அல்லது மாலையில் மேற்கொண்டால் நீர் ஆவியாகும் தன்மையைக் குறைக்க முடியும்.

வீடுகளில் அல்லது புதிதாக கட்டடங்கள் கட்டுவோர் வீட்டு முற்றங்களில் அல்லது காணிகளில் கல்லுப்பதிப்போர் அல்லது சீமெந்து நிலம் போடுபவர்கள் யாழ் குடாநாட்டை பொறுத்த வரை அதை முற்றாக தவிருங்கள். இதன் மூலம் உங்கள் காணிகளில் கிடைக்கும் மழைநீரை நிலத்தடியில் சேமிக்க முடியும்.

குடாநாட்டில் ஆழ்துளைக் கிணறுகளைத் தவிர்த்து ஆழம் குறைந்த சாதாரண கிணறுகளை அமைப்பதன் மூலம் நன்னீர் வளத்தை பாதுகாக்க முடியும். அதிகளவான ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் போது நிலத்தடியில் உள்ள நன்னீர் அதிகளவாக உறிஞ்சப்படும். இவ்வாறு உறிஞ்சப்படும் போது கீழே உள்ள உப்புப்படலம் மேல் நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றது. இதன் மூலம் அந்த நிலங்களும் சுற்றாடலும் உவர் தன்மையாக மாறும் சாத்தியம் அதிகமாகின்றது. ஆகையால் முடிந்தளவு அதிக ஆழத்தில் ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்

அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் காணிகளில் பெறுமதி மிக உயர்ந்த நிலையில் உள்ளது. ஆனால் நாங்கள் இந்த நீர்வாளத்தை பாதுகாக்க தவறினால் காணிகள் பெறுமதி அற்று மக்கள் இங்கு வாழமுடியாத சூழ்நிலை ஏற்படும் .

ஆகவே குடாநாட்டை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்துவரும்  ஒவ்வொரு பிரஜையும் இந்த ஆபத்தை உணர்ந்து மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை பாதுகாக்க பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

Recent post